வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு : தேனி மாவட்ட விவசாயிகள் அதிருப்தி

பாசனத்திற்காக வருகின்ற 1ம் தேதி முதல் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவால் தேனி மாவட்ட விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வைகை அணை உள்ளது. இதன் நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை பொய்த்துபோனது. இதனால் அணையின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவில் 20 அடியாக குறைந்தது. இதனால் குடிநீருக்காக அணையை நம்பி இருந்த தேனி, மதுரை மாவட்ட மக்கள் கடும் குடிநீர் பஞ்சத்தை சந்தித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக நீர்பிடிப்பு பகுதியில் பரவலாக மழை பெய்ததாலும், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது.
பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டு கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் மற்றும் குடிநீர் தேவைக்கு போகவும், குரங்கனி, சுருளிமலை ஆகிய பகுதிகளிலிருந்து மழைகள் மூலம் வரும் தண்ணீரும் இணைந்து வைகை அணையின் நீர்தேக்க பகுதிக்கு வரும் போது விநாடிக்கு 1050 கனஅடியாக வந்தடைகிறது. இதனால் 71 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து தற்போது 54.59 அடியாக உள்ளது. கடந்தாண்டு இதே தேதியில் நீர்மட்டம் 22.87 இருந்தது குறிப்பிடத்தக்கது. அணையிலிருந்து மதுரை மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 48 கனஅடியும், ஆண்டிபட்டி மற்றும் சேடபட்டி மக்களின் குடிநீர் தேவைக்காக 12 கனஅடியும் ஆக மொத்தம் 60 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நவ.1ம் தேதி வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார். இதனால் தேனி மாவட்ட விவசாயிகள் விரக்தியில் உள்ளனர். இதுகுறித்து விவசாயி பாண்டி கூறுகையில், இப்பகுதி முழுவதும் கடுமையான வறட்சியினால் தென்னை உள்ளிட்ட மரங்கள் காய்ந்து கருகி மண்ணுக்கு இரையாகியது. தற்போது பெய்த மழையினால் வைகை அணை இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 54 அடியை தாண்டியுள்ளது. இப்பகுதியில் வறண்டு காணப்பட்ட கிணறுகளில் தற்போது தான் நீர்மட்டம் உயருகிறது. இந்நிலையில் அரசு விளம்பரத்தை தேடிக்கொள்வதற்காக அணையை திறந்துவிடுகிறது என்று விரக்தியில் கூறினார்.
இது குறித்து விவசாயி நவநீதன் கூறுகையில்,‘முதல்வர் பழனிச்சாமி யாருடைய ஆலோசனையில்லாமல், தேனி மாவட்டத்தில் நடைபெறவுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை கருத்தில் கொண்டு மக்களை திரட்டுவதற்காக தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்கிறார். மேலும் அணையின் கொள்ளளவான 6091 கனஅடியில் குறைந்தபட்சம் 2000 மில்லியன் கனஅடி நீர் இருந்தால் மட்டுமே விவசாயத்திற்கு அரசின் அனுமதியோடு தண்ணீர் திறக்க வேண்டும் என்று விதிமுறைகள் உள்ளது. இதனை மீறி செயல்படுகிறார்’ என்று கூறினார்.இது குறித்து விவசாயி மகாராசன் கூறுகையில்,அரசு அறிவித்தபடி தண்ணீர் திறந்தால் அப்பகுதி விவசாயிகளுக்கு தற்போது மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் இன்னும் 3 மாதத்திற்கு பின்னர் வைகை அணையில் தண்ணீர் இருந்தால் தான் நெல் பால்மணி பிடிக்கும் போது மீண்டும் தண்ணீர் திறக்க முடியும். இல்லையெனில் அனைத்து விவசாயிகளுக்கும் சிரமம் தான் என்றார்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளில் ஒருவர் கூறுகையில், தற்போது முல்லை பெரியாறு அணையில் 3004 டிஎம்சியும், வைகை அணையில் 2633 டிஎம்சி தண்ணீரும் ஆக 5639 டிஎம்சி தண்ணீர் தான் உள்ளது. ஆனால் இரண்டு அணைகளின் கூட்டுதல் இருப்பு தண்ணீர் 6000 டிஎம்சி தண்ணீருக்கும் குறைவாக உள்ளதாலும், வைகை நீர்பிடிப்பு பகுதியில் தற்போது மழைப் பொழிவு குறைந்த நிலையில் தண்ணீரை திறந்தால் வருகின்ற சில மாதங்களிலேயே மதுரை தேனி மாவட்டங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறினார்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
