தி.மு.க-வினரின் மாட்டு வண்டி போராட்டம் கோஷத்தால் மிரண்டு ஓடிய மாடுகள்

தமிழக அரசு அறிவித்த பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி இன்று தி.மு.க கட்சி கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்க இருக்கிறது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதகாக தான்தோன்றிமலை நகர முன்னாள் நகரச் செயலாளர் ரவி, பத்துக்கும் மேற்பட்ட தி.மு.கவினர்களை மாட்டு வண்டியில் ஏற்றி போராட்ட இடத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், தான்தோன்றிமலையில் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் வண்டியில் இருந்தவர்கள் போட்ட பலத்த கோஷ சத்தத்தை கேட்டு மிரண்ட மாடுகள் இரண்டும், வண்டியை தாறுமாறாக இழுத்துக் கொண்டு அங்கும், இங்கும் ஓடியது. சாலை நடுவே இருந்த பேரிகார்டுகள், டிவைடர்கள் என எல்லாவற்றையும் மோதி தள்ளியது. வண்டியில் இருந்த அனைவரும் அலறினர்.
தறிக்கெட்டு ஓடிய மாடுகள், டூவீலரில் வந்த இருவரையும் மோதி தள்ளிவிட்டு, தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் வண்டி அப்படியே கவிழ, வண்டியில் இருந்த அனைத்து தி.மு.கவினரும் தூக்கி வீசப்பட்டனர். வண்டி உடைந்து சின்னாபின்னமானது.
இதில், மாட்டுவண்டியில் பயணித்த மூன்று தி.மு.கவினர் படுகாயமடைந்தனர். மற்றவர்கள் காயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மாடுகளால் மோதப்பட்டு, கீழே விழுந்த டூவீலரில் வந்த இரண்டு நபர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வித்தியாசமாக போய் போராட்டத்தில் கலந்து கொள்வோம் என்று நினைத்த தான்தோன்றிமலை தி.மு.கவினரின் முயற்சி சோகத்தில் முடிந்தது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
Previous Postஅழுகிய தக்காளியான அதிரடி கெய்ல்..
