தியேட்டர் கட்டண உயர்வைப் பற்றிப்பேசும் நீங்கள் தியேட்டர் கொள்ளைகளைப் பற்றிப்பேச மறுப்பதேன் ?!

தியேட்டர் கட்டணத்தை உயர்த்த அனுமதித்ததன் மூலம் பொழுதுபோக்குக்காக சினிமாவுக்கு வரும் மக்களின் தலையில் மேலும் சுமை ஏறிவிட்டது.
உழைத்து களைத்து வரும் மக்களுக்கு மிகவும் சிறந்த பொழுதுபோக்காக இருப்பது டிவியும், சினிமாவும்தான். இதில் பல பிரிவுகள் உண்டு. தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகையின் படத்தை உடனே பார்த்து விட வேண்டும் என்பது ஒரு ரகம்.
படம் நன்றாக இருந்தால் பார்க்கவேண்டும் என சினிமாவுக்கு செல்வது மற்றொரு ரகம். பொழுதுபோக்கிற்காக சினிமா பார்ப்பவர்கள் என பல ரகத்தினர் உண்டு. இவர்கள் ஏற்கெனவே கட்டண கொள்ளையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து இந்த வரி விதிப்பு முறை அமலுக்கு வந்துவிட்டது. ஆனாலும் உள்ளாட்சி கேளிக்கை வரி, ஜி.எஸ்.டி. வரி என்று இரட்டை வரிகளை செலுத்த முடியாது என்று தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் திரையரங்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான டிக்கெட் கட்டணத்தை கொண்டுவர வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக மல்டிப்ளஸ் தியேட்டர்களை கடந்த 3 நாள்களாக மூடி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் சென்னையில் தியேட்டர் கட்டணத்தை உயர்த்தி கொள்ள தியேட்டர் உரிமையாளர்களுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் ஏசி மல்டிபிளக்ஸ் திரையரங்கு கட்டணம் அதிகபட்சமாக ரூ. 160ம் குறைந்தபட்சமாக ரூ 50ம் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏசி அல்லாத திரையரங்குகளில் அதிகபட்ச கட்டணமாக ரூ. 120ம் குறைந்தபட்சம் ரூ. 40ம் கட்டணமாக வசூலித்துக் கொள்ளலாம் என்று அரசு அனுமதித்துள்ளது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை, சிலிண்டர் விலை, அத்தியாவசிய பொருள்களின் விலை ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதாலும், ஜிஎஸ்டி வரி விதித்துள்ளதாலும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கேளிக்கை வரியை ரத்து செய்ய கோரும் தியேட்டர் உரிமையாளர்களை தமிழக அரசு தங்கள் வழிக்கு கொண்டு வராமல் மொத்த சுமையையும் மக்கள் மீது விதிக்க காரணமாக ஆகிவிட்டது.
 ,
பெரும்பாலான தியேட்டர்களில் ஒரு பாப்கார்ன் பாக்கெட்டின் விலை தியேட்டர் கட்டணம் அளவுக்கு வசூலிக்கப்படுகிறது. வெளியே விற்கப்படும் குளிர்பான விலையைக் காட்டிலும் இரண்டு மடங்கு கட்டணம் தியேட்டரில் விற்கும் குளிர்பானங்கள் மீது விதிக்கப்படுகிறது. இதுபோதா குறைக்கு வாகனங்கள் நிறுத்துமிடத்துக்கான கட்டணக் கொள்ளை வேறு. இந்த வாகன கட்டணத்தை சமாளிக்க ஆட்டோ பிடித்து தியேட்டருக்கு வரலாம். ஆனால் வீட்டிலிருந்து தின்பண்டங்களை கொண்டு வரக் கூடாது. அவர்கள் விற்கும் தின்பண்டங்களைத்தான் வாங்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்கள்.
கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என்றால் தியேட்டரில் ஸ்நாக்ஸ் , பார்க்கிங்கில் அடிக்கப்படும் கொள்ளையை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு பதிலுக்கு நிபந்தனை விதித்திருக்கலாம். ஆனால், அப்படி ஏன் செய்யவில்லை? குட்ட குட்ட குனியும் சாமானிய மக்களின் முதுகில் மேலும் பாரத்தை ஏற்றியுள்ளது. இதனால் இனி மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் நிலை குறைந்து விடும். திருட்டி விசிடிக்களும், ஆன்லைனில் படம் பார்ப்பதும் அதிகரிக்கக் கூடும். சாமானிய மக்களின் சிரமங்களை பற்றி சிந்திக்காமல் பெரும் பணக்காரர்களான தியேட்டர் உரிமையாளர்களின் கஷ்டத்துக்கு செவி சாய்த்துள்ளது மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்று பொதுமக்கள் நொந்து கொள்கின்றனர். தியேட்டர் உரிமையாளரை கூட சமாளிக்க இயலாத அரசாக உள்ளதா என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
