Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

கொல்கத்தா சம்பவம் திமுகவுக்கு ஞாபகம் இல்லையா? - சீமான் காட்டம்!

On November 13, 2024
WhatsApp Image 2024-11-13 at 20.56.00
Share

தனது தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்று கூறி விக்னேஷ் என்பவர், கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில், மருத்துவரின் கழுத்து, காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாக்கப்பட்டுள்ளது. பின்னர், மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவரை தாக்கிய விக்னேஷை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது பதிவில், "சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய்த்துறை மருத்துவர் பாலாஜி மீது, மருத்துவமனைக்குள்ளேயே கத்தியால் குத்தி கொலைவெறித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது.

திமுக ஆட்சியில் மக்களின் உயிர்காக்கும் மருத்துவர்களின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாட்டின் தலைநகரில் பட்டப்பகலில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே புகுந்து மருத்துவர் மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எந்த அளவிற்குச் சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது.

அண்மையில் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவமனை வளாகத்திலேயே பெண் மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிகழ்வு நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது திமுக அரசுக்கு தெரியாதா?

அல்லது அந்நிகழ்வினால் மருத்துவர்கள் தங்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்று நாடு தழுவிய அளவில் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டது தெரியாதா?

இறுதியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததுதான் தெரியாதா?

அவற்றிலிருந்து திமுக அரசு எவ்விதப் பாடமும் கற்காதது ஏன்? கொல்கத்தா கொடும்நிகழ்விற்கு பிறகாவது மருத்துவமனை மற்றும் மருத்துவர்களின் பாதுகாப்பில் திமுக அரசு கூடுதல் அக்கறை செலுத்தியிருந்தால் தற்போது மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித்தாக்குதல் நிகழ்ந்தே இருக்காது.

மருத்துவமனைக்கு கலைஞர் பெயரைச் சூட்டுயதில் காட்டிய அக்கறையில் அணுவளவாவது அரசு மருத்துவர்களைப் பாதுகாப்பதில் திமுக அரசு காட்டாதது ஏன்? திமுக அரசின் சிறிதும் பொறுப்பற்ற அலட்சியமே அரசு மருத்துவர் பாலாஜி மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு முழுமுதற் காரணமாகும்.

ஆகவே, திமுக அரசு இனியாவது மெத்தனமாக இல்லாமல், தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் பாதுகாப்பினை உறுதிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாக வலியுறுத்துகிறேன்.

கொலைவெறித் தாக்குதலுக்கு ஆளாகி தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில், அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்படவிருக்கும் மருத்துவர் பாலாஜி விரைந்து நலம்பெற விழைகிறேன்" என்று கூறியுள்ளார்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.