கார்த்திக் சிதம்பரத்திற்கு சீமான் பதிலடி!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கும் நாளுக்கு முன்பு வரை தம்பி, தம்பி என பாசமாக அழைத்து வந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திடீரென கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதற்கு காரணம் தமிழ் தேசியம் என பேசி வந்த சீமானுக்கு விஜய் எடுத்த தமிழ் திராவிடமும் தேசியமும் முக்கியம் என்ற நிலைப்பாடுதான் என சொல்லப்படுகிறது.
அரசியல் களத்தில் மீன்கள் மட்டும் இல்லை, முதலைகளும் இருக்கும் என சீமான் விஜய்க்கு அறிவுரை வழங்கியதாகவும் அதையும் பூச்சாண்டி காட்டாதீர்கள் என விஜய் மாநாட்டில் விமர்சித்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் நாம் தமிழர் கட்சியில் இருந்து பலர் தவெகவுக்கு தாவி விட்டதாகவும் கூறப்படும் நிலையில் சீமான் அதை முற்றிலும் மறுத்துள்ளார்.
இதனிடையேதான் விஜயை சரமாரியாக சீமான் தாக்கி வருகிறாரே என்ற கேள்வி கார்த்தி சிதம்பரத்தின் முன் வைக்கப்பட்டது. அப்போது அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம் 'சீமானுக்கு நிரந்தர வாக்கு வங்கி இல்லை. ஒருமுறை அவருக்கு வாக்களிப்பவர்கள் மறுமுறை வாக்கு அளிப்பதில்லை. அதனால் அவருக்கு அச்சம் வந்திருக்கும்' என விமர்சித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கன்னியாகுமரியில் செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 'என்னை நேசிக்கிற, என்னை பின் தொடர்கிற, எனக்கு வாக்கு செலுத்துகிற என் மக்கள் யார் என்று பாருங்கள். பொழுதுபோக்கு தளத்தில் தலைவனை தேடியவர்கள் அல்ல, என்னை விரும்புகிற மக்கள். போராட்ட களத்தில் தலைவனை தேடுகிற மக்கள்தான் என்னை பின் தொடர்வார்கள். காற்றடிக்கும் திசையெல்லாம் பறக்கிற பதர்கள் எனக்கு வாக்கு செலுத்தமாட்டார்கள். புயலே அடித்தாலும் நகராமல் அதே இடத்தில் இருக்கும் தூய நெல்மணிகள்தான் எனக்கு வாக்கு செலுத்துபவர்கள். ஜெயலலிதா, கருணாநிதி இருக்கும்போது கட்சி ஆரம்பித்தவன் நான். அவர்களை விட விஜய்க்கு நிறைய கூட்டம் வந்ததா?
கார்த்தி சிதம்பரம் சொல்கிறார், சீமானின் வாக்கு வங்கி குறைவு என்று. எனக்காவது வாக்கு வங்கியில்தான் குறைvu. ஆனால் உங்களுக்கு வாக்கே கிடையாது. கார்த்தி சிதம்பரமும் நானும் ஒரே ஊர்தான். நீங்களும் நானும் போட்டியிடுவோம். கூட்டணி இருக்க கூடாது. நானும் கூட்டணி வைப்பதில்லை. யார் ஜெயிக்கிறார்கள் என்று அப்பொழுது பார்ப்போம். ஆனால் நீங்கள் யாருக்கும் காசு கொடுக்க கூடாது. நீங்களும் உங்கள் தந்தையும் வைத்திருக்கும் காசு திமிரில் பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று ஆட கூடாது. ரெண்டு பேரும் நிற்போம். அப்போ வாக்கு வங்கி யாருக்கு இருக்கு என்று தெரியும். அதுக்கு தயாரா?
நான் கூட்டணியே வைக்காமல் ஓட்டு வாங்கியுள்ளேன். ஒரு ரூபாய் கூட காசு கொடுக்காமல். புது வேட்பாளரை நிறுத்தி ஓட்டு வாங்கியுள்ளேன். சரியாக ஓராண்டுதான் உள்ளது. 2026 தேர்தலில் எவ்வளவு வாக்கு வாங்கியுள்ளேன் என்பதை பார்ப்பீர்கள். என் கட்சி உறுப்பினர் அட்டையை காண்பிக்க சொல்லுங்கள். சும்மா யாரையாது கூட்டிவந்து வச்சிகிட்டு நாம் தமிழர் கட்சி என்று சொல்லுகிறார்கள். நான் அந்த கட்சி வேட்பாளர் என்று காட்டவா? எனக்கு அந்த பழக்கம் இல்லை. சும்மா சொல்லுறேன்' எனத் தெரிவித்தார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
