உண்மையான கொலையாளி யார்? ஆருஷி கொலைவழக்கில் நீடிக்கும் மர்மம்!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 2008 ஆம் ஆண்டு ஆருஷி என்ற சிறுமியை கொலை செய்த வழக்கில், ஆருஷின் பெற்றோரை அலகாபாத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு நொய்டாவில், ஆருஷி தல்வார் என்ற 14 வயது சிறுமி மற்றும் வீட்டின் வேலைக்காரர் ஹேமராஜ் (45) ஆகிய இருவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நடந்த விசாரணையில், அவர்கள் இருவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாகக் கருதி, ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர் தல்வார் இருவரும் அவர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த இரட்டைக் கொலை வழக்கில், மாநில போலீசாரால் துப்பு துலக்க முடியாததால் வழக்கு விசாரணை சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. விசாரணையின் முடிவில் ஆருஷியின் பெற்றோரான ராஜேஷ் தல்வார், நூபுல் தல்வார் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த காசியாபாத் சிபிஐ நீதிமன்றம், அவர்கள் இருவருக்கும் கடந்த 2013-ம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.
இதனைத்தொடர்ந்து, இந்தத் தீர்ப்பை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆருஷியின் பெற்றோர் மேல்முறையீடு செய்தனர். . இவ்வழக்கின் அனைத்து தரப்பு சாட்சியங்களிடமும் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தல்வார், அவரது மனைவி நூபுர் தல்வார் ஆகியோருக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்களை விடுதலை செய்வதாக அறிவித்தனர். வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் என அறிவித்து தண்டிக்க முடியாது என்றும் கூறினர். எனவே, 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஆருஷியின் பெற்றோர் விரைவில் விடுதலை ஆக உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கொலை செய்தவர்கள் யார் என்ற கேள்வி மீண்டும் எழுந்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
