ஷாருக்கான், சிவகார்த்திகேயன் போல வ(ள)ரும் ஹீரோ – ஸ்பெஷல் பேட்டி

ஷாருக்கான், மாதவன், தொடங்கி சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களின் வரிசை தொடர்கிறது. இந்த டிவி - மூவி வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு நடிகர் ப்ரஜின். சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த வீடியோ ஜாக்கி ப்ரஜின், இப்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். சமீபத்தில் துபாயில் ‘மணல் nagaram’ படப்பிடிப்பில் இருந்த பிரஜின் அளித்த பிரத்யேக பேட்டி..இதோ உங்களுக்காக!!
நீங்கள் சின்னத்திரையிலிருந்து சினிமாவுக்கு வந்தவர். சினிமாவில் நுழைய இது சுலபமான வழியா?
அப்படிச் சொல்ல முடியாது. டிவியிலிருந்து சினிமாவுக்கு ஷாருக்கான், மாதவன் போன்ற சிலர் வந்து வெற்றி பெற்றார்கள். என்றாலும் எல்லாரும் வர முடியாவில்லை. சற்று முன்பு காலம் வரை கஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் டிவியில் பிரபலமான முகத்தை சினிமாவில் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிற அபிப்ராயம் இருந்தது. வீட்டுக்கு வீடு பார்த்து பழகிய முகத்தை சினிமாவில் ஏற்க மாட்டார்கள், சலிப்பு தரும் என்கிற தவறான அபிப்ராயம் இருந்தது.
சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வரவேற்பு அதை மாற்றி இருக்கிறதே..?
இப்போது நிலைமை மாறி இருக்கிறது. ஏற்கெனவே மக்களிடம் பரிச்சயமாகியிருக்கும் முகம் சினிமாவில் வரும்போது நல்லது தான் விளையும் என்கிற கருத்து இப்போது வந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை நல்ல அறிகுறியாகவே நினைக்கிறேன்.
டிவி வீடியோ ஜாக்கி அனுபவம் சினிமாவில் உதவுகிறதா?
நிச்சயமாக உதவுகிறது. லைட், கேமரா எப்படி நிற்பது எங்கே பார்த்து பேசுவது என்பதெல்லாம் டிவி மூலம் தெரிந்து கொண்டது சினிமாவில் நிச்சயம் உதவுகிறது. இந்த லைட்ஸ், கேமரா பற்றிய குறைந்த பட்ச அனுபவ அறிவு நம்பிக்கை தருகிறது.
யாரையும் எதிர்கொண்டு பேசுவதில் தயக்கம் இல்லாத தைரியம் கொடுப்பது வீடியோஜாக்கி அனுபவம் தான். என்னால் அச்சமின்றி யாரையும் அணுகிட முடியும். பேசிட முடியும் என்கிற தைரியம் கொடுத்தது அந்த அனுபவம் தான். நான் எதையும் கற்றுக் கொள்ள ஆர்வமாக இருப்பவன். அதன் மூலம் சினிமாவில் கற்றுக் கொண்டே இருக்கிறேன்.
சினிமா வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன?
நான் முதலில் நடித்தது மலையாளப் படத்தில்தான் .அந்தப் படம் 'த்ரில்லர்', அதில் ப்ருத்திவிராஜ் ஹீரோ. நான் இரண்டாவது ஹீரோ. அதன்பிறகு லால் இயக்கத்தில் 'டோர்னமெண்ட்'. தமிழில் நான் நடித்த முதல் படம் 'தீக்குளிக்கும் பச்சைமரம்' வினீஷ், ப்ரவீன் என இரண்டு பேர் இயக்கினார்கள். 'தீக்குளிக்கும் பச்சைமரம், 'டோர்னமெண்ட்' இரண்டுமே வித்தியாசமான கதைகள். ஒன்று மார்ச்சுவரி சம்பந்தப்பட்ட கதை. இன்னொன்று விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை.
இப்போது நடிகர் சங்கர் இயக்கத்தில் 'மணல் நகரம்' படத்தில் நடித்து முடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க துபாயில் எடுக்கப்பட்டது. அடுத்து 'பழைய வண்ணாரப்பேட்டை' என்கிற படம். இதுவும் எனக்கு வித்தியாசமான அனுபவம்தான்.
'மணல் நகரம்' துபாய் அனுபவம் எப்படி இருந்தது?
இது உண்மைச் சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம். நாடு விட்டு நாடு போய் பிழைப்புக்காகச் செல்லும் நம் நாட்டவர்கள் அந்நாட்டு சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள். ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது அந்நாட்டு சட்டத்திலிருந்து மீண்டுவர என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சொல்லும் படம். சுமார் 50 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரண்டு மாதங்கள் தவிர அங்கு வெயில் சுட்டெரிக்கும். சாதாரண நாட்களிலேயே நம்மூர் கத்திரி வெயிலைப் போல நாலுமடங்கு கொளுத்தும். அப்படிப்பட்ட வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.
யாரை முன்னோடியாக எண்ணி வளர விரும்புகிறீர்கள்?
வீடியோ ஜாக்கி வேலையை விட்டு விட்டு. பல வருஷங்கள் இருந்துவிட்டு சினிமாவுக்கு பயணப்பட்டபோது நிறைய புறக்கணிப்புகள் ஏமாற்றங்கள் இருந்தன. ஏழெட்டு வருஷப் போராட்டங்கள். அப்போது சினிமாவின் கதவுகள் திறக்கவே இல்லை. விடாமல் போராடினேன். இப்போதும் போராட்டம் இருக்கிறது.
நாம் நம் வேலையைச் சரியாகச் செய்தால் நிச்சயம் ஒருநாள் கவனிக்கப்படுவோம். ஈடுபாடு, தேடல், முயற்சி, உழைப்பு, நம்பிக்கை இவற்றை கைவிடவே கூடாது. இது நான் விக்ரம் சாரிடம் கற்றது. போராடி ஜெயித்த விதத்தில் அவர் ஒரு பாடமாக என்முன் தெரிகிறார். நடிப்பின் இலக்கணமாக கமல் சார் இருக்கிறார். அவரை மிகவும் பிடிக்கும். இந்த விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி.
உங்கள் மனைவியும் நடிகையாக இருப்பது உங்களுக்கு எந்த வகையில் சாதகமாக உள்ளது?
சினிமாத்தொழில் பற்றிய புரிதலுக்கு துணையாக இருக்கிறது.என் மனைவியின் பெயர் சாண்ட்ரா. எங்களுக்கு திருமணமாகி சுமார் 5 ஆண்டுகள் ஆகின்றன. அவரும் டிவி தொகுப்பாளர்தான் நிறைய ஷோக்கள் செய்து வருகிறார். அவரும் இப்போது 'சிவப்பு எனக்கு பிடிக்கும்' படத்தில் நடித்து வருகிறார்.
லட்சியம்?
நல்ல கதைகளுக்கு தமிழில் வரவேற்பு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க ஆசை. நம் கதாபாத்திரங்கள்தான் நம்மை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்கிற தெளிவும் நம்பிக்கையும் எனக்கு உள்ளது.
 ,Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
