வசமாக மாட்டிக் கொண்ட மோகன்லால் : பதிலளிப்பாரா..?

நடிகை ரேவதி சம்பத் என்பவர் நடிகர்கள் சித்திக் மற்றும் ரியாஸ் கான் இருவரும் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இது பலரிடமும் அதிர்ச்சியை உண்டாக்க தொடர்ந்து பெங்காலி நடிகை ஸ்ரீலேகா மித்ரா என்பவர் பிரபல மலையாள இயக்குநர் ரஞ்சித், சினிமா விவாதத்திற்காகத் தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்தார் என கூறியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் கேரளத்தில் அதிர்வைக் கிளப்ப, உடனே நடிகர் சித்திக் மலையாள நடிகர்கள் சங்கத்தில் (அம்மா) பொறுப்பு வகித்த பொதுச்செயலர் பதிவியை ராஜினாமா செய்தார். அதேபோல், இயக்குநர் ரஞ்சித்தும் கலாச்சித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்.
மாநில அரசே இந்தப் பிரச்னையில் தீவிரம் காட்ட முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது . மேலும், நடிகை ரேவதி சம்பத்தின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இன்னும் பல நடிகைகள் தங்களுக்கு நிகழ்ந்த பாதிப்புகளைக் குறித்து பேச முன்வந்தால் பல நடிகர்கள் சிக்குவார்கள் என்றே தெரிகிறது.
தற்போது, நடிகர் மோகன்லால் மீதும் கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. காரணம், மலையாள நடிகர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் மோகன்லாலுக்கு சித்திக்கின் பாலியல் தொல்லைகள் குறித்து தெரியாமல் இருக்குமா? இது தெரிந்தும் மோகன்லால் ஏன் இவ்வளவு நாட்களாக சித்திக் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? இதைப்பற்றி எதுவும் தெரியாது என்றால் சக நடிகைகளுக்கு நிகழ்ந்த பாலியல் வன்முறைகளைக்கூட அறியாத நடிகர் சங்கத் தலைவராக எதற்காக இருக்கிறார்? என பலரும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.
முக்கியமாக, நடிகர் திலகனின் மகனான ஷம்மி திலகன், "ஹேமா கமிட்டி மூலம் பலரின் உண்மையான முகங்கள் தெரிய வர வேண்டும். இல்லையென்றால், தெரிய வைக்கப்படுவார்கள். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும். இதுகுறித்து பேசவதற்கான தகுதியை நடிகர் மோகன்லால் இழந்துவிட்டார்" எனக் கூறியுள்ளார்.
மறைமுகமாகவோ நேரடியாகவோ நடிகர் மோகன்லால் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. சித்திக்கின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மோகன்லால் பதிலளிப்பாரா? என்பதே கேரளத்தின் தற்போதைய வைரல் கேள்வி.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
