Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

லட்டு சர்ச்சையில் சிக்கிய கோபி சுதாகருக்கு ஆதரவாக 35 யூட்யூபர்கள் ஒருங்கிணைப்பு.

On October 2, 2024
WhatsApp Image 2024-09-29 at 22.19.16 (1)
Share
உலகப் புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்த லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெயில் மாட்டுக் கொழுப்பு கலந்திருப்பதாக பகீர் புகாரை எழுப்பினார் ஆந்திர முதலமைச்சரான சந்திரபாபு நாயுடு. உலகம் முழுவதும் இருக்கும் ஏழுமலையான் பக்தர்களிடையே இந்த தகவல் பெறும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில் லட்டு விவகாரம் தொடர்பாக தங்களது பரிதாபங்கள் யூட்யூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டனர் பிரபல யூட்யூபர்களான கோபியும் சுதாகரும். 'லட்டு பாவங்கள்' வெளியான சில மணி நேரங்களில் அந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கடந்த நிலையில் திடீரென அது நீக்கப்பட்டது. பக்தர்கள் மனம் புண்படும்படி இருந்ததாக கூறியதால் அதனை நீக்கிவிட்டதாக கோபி சுதாகர் கூறினர். இதற்கிடையே தமிழக பாஜகவை சேர்ந்த சிலர் கோபி சுதாகரை மிரட்டி அந்த வீடியோவை நீக்க கூறியதாக கூறப்பட்டது. மேலும் கோபி, சுதாகர் மீது திருப்பதியில் காவல்துறையிடம் தமிழக பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜாவிடம் கோபி சுதாகர் மன்னிப்பு கேட்டதாகவும், இதனால் அவர்கள் மீதான புகார் வாபஸ் பெறப்பட்டதாக பாஜக அறிவித்தது. இதற்கிடையே பரிதாபங்கள் யூட்யூப் சேனலின் கோபி சுதாகருக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 35 பிரபல யூட்யூப் சேனல் உரிமையாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், 35 பேரும் கையெழுத்திட்டுள்ளனர். அதில்,"சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானதில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில் கலப்பட நெய் சேர்க்கப்பட்டதாக ஆந்திரமாநில முதலமைச்சர் திரு.சந்திரபாபு நாயுடு ஒரு தகவலை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து திருப்பதி லட்டு இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியது. இவ்வாறு மக்களிடையே பேசுபொருளாக மாறும் ஒரு விவாகரம் அரசியல், கலை, பண்பாடு என அனைத்து தளங்களிலும் எதிரொலிப்பதும், ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துகளுடன் ஒரு விவாதம் நடைபெறுவதும் ஆரோக்கியமான ஜனநாயகப்பூர்வமான சமூகத்தில் இயல்பானது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் இந்தியாவை அப்படியாகவே வரையறுத்துள்ளது. அந்தவகையில், திரு.சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்திற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். அதேபோல், கலைஞர்களும், பத்திரிகையாளர்களும், சமூக செயல்பாட்டாளர்களும் கருத்துகளைத் பதிவிட்டனர். இந்த ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துச் சுதந்திர உரிமையின் அடிப்படையிலேயே நடைபெற்றது. இருந்தபோதும், திருப்பதி லட்டு குறித்து தெரிவிக்கப்பட்ட சில கருத்துகளை வேண்டுமென்றே திரித்து, அக்கருத்தை வெளியிட்டவர்களை சிலர் மிரட்டி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, 'பரிதாபங்கள்' என்ற யூடியூப் சேனலில் வெளியான, திருப்பதி லட்டு குறித்த வீடியோவுக்கு தமிழ்நாடு பாஜகவை சேர்ந்த சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அதை வெளியிட்ட கோபி -சுதாகரை மிரட்டி, அந்த வீடியோவையே யோவையே நீக்கச் செய்துள்ளனர். நகைச்சுவை மூலமாக நல்ல கருத்துகளை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கலை வடிவம், நிகழ்காலத்துக் கலைகளில் மிக முக்கியமானது. இந்த கலை வடிவத்தை பின்பற்றும் கோபி - சுதாகர், மக்களை சிரிக்க வைப்பதுடன் சிந்திக்க வைக்கும் பணியையும் செய்து வருகின்றனர். ஆனால், இந்தக் கலைவடிவம் தமிழ்ச் சமூக வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணியை மறுதலிக்கும் வகையிலும், இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சுருத்துச் சுதந்திர உரிமையை காலில் போட்டு மிதிக்கும் வகையிலும், கோபி சுதாகருக்கு எதிராக மிரட்டல் விடுத்து வரும் பாஜகவை சேர்ந்த தலைவர்களை வன்மையாக கண்டிக்கிறோம். இதேபோல், குணால் கம்ரா, முனாவர் ஃபரூக்கி போன்ற நகைச்சுவைக் கலைஞர்களுக்கும் பாஜகவினர் தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதுடன் அவர்கள் நிகழ்ச்சி நடத்தவிடாமல் தடை ஏற்படுத்தி வருவதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். கோபி சுதாகர் மட்டுமல்லாமல் அவர்களை சார்ந்தவர்களும் சமூக வலைதளங்களில் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டு வருவதுடன், அவர்களின் தொழிலை முடக்கும் வகையிலும் பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் செயல்பட்டுவருகின்றனர். ஆகவே, கோபி - சுதாகர் மற்றும் அவர்கள் குடும்பத்தாரின் பாதுகாப்பை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் அவர்களுடைய தொழில் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும். இது பரிதாபங்களுக்கு எதிரானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த கருத்து சுதந்திரத்திற்கும் எதிரானது எனவே கருத்துரிமையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு அழுத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 'பரிதாபங்கள்' யூடியூப் சேனல் வெளியிட்ட திருப்பதி லட்டு குறித்த வீடியோ மீண்டும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க கடமைப்பட்ட அனைவரும் ஒருங்கிணைந்து, இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறோம்." என கூறப்பட்டுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.