பேருந்து பயணக் கட்டண உயர்வை எதிர்த்து ஜனவரி 27ம் தேதி, தி.மு.க., மறுமலர்ச்சி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்..

தமிழக அரசு பேருந்து பயணக் கட்டணத்தை நூறு விழுக்காடு அளவுக்கு உயர்த்தி இருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. டீசல் விலை உயர்வை இதற்குக் காரணமாகச் சொல்வதை ஏற்க முடியாது. ஏனெனில், பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும், அதன் பயன் பொது மக்களுக்குச் சென்றடையும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைப்பது இல்லை. 2014-இல் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பெட்ரோல் மீதான உற்பத்தி வரி 133.47 விழுக்காடும், டீசல் மீதான உற்பத்தி வரி 400.86 விழுக்காடும் உயர்த்தப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு 23 விழுக்காடு வாட் வரி விதிக்கிறது, தமிழக அரசு 27 விழுக்காடு வாட் வரி விதிக்கிறது. இதையும் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் அ.தி.மு.க. அரசு 27 ரூ லிருந்து 34 ரூ ஆக உயர்த்தியது.
காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தை தமிழ்நாடுதான் பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் இயக்கி வரும் 78.3 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்று மத்திய போக்குவரத்துத் துறையின் அறிக்கை சுட்டிக்காட்டி இருக்கிறது.
மக்களின் கோபத்தையும் கொந்தளிப்பையும் தமிழக அரசுக்கு உணர்த்திடும் வகையில் ஜனவரி 27-ஆம் தேதி அன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்த இருக்கின்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் பங்கேற்கும். கழகத்தின் மாவட்டச் செயலாளர்கள், கழகத் தோழர்கள் பெருமளவில் இந்த அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுகிறேன் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
