பேரறிவாளன் பரோல் நீட்டிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயகுமார், ரவிசந்திரன் ஆகிய 7 பேருக்கும் முதலில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் 7 பேரும் வேலூர் சிறையிலும், சென்னை புழல் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. மேலும் பேரறிவாளனுக்கும் உடல் நலம் சரியில்லாததால் அவர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார்.
தாயார் அற்புதம்மாள் கோரிக்கை
இந்நிலையில் தந்தையின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தாயார் அற்புதம்மாள் பல முறை கோரிக்கை விடுத்தார். இந்த பரோல் விவகாரம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், அதிமுக கூட்டணி எம்எல்ஏக்களும் சட்டசபையில் எழுப்பினர்.
முதல்முறையாக பரோல்
இந்நிலையில் அவருக்கு ஒரு மாத காலம் பரோல் வழங்குவதாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து 26 ஆண்டுகளுக்கு பின்னர் முதல்முறையாக பேரறிவாளன் கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியே வேலூர் சிறையிலிருந்து வெளியே வந்தார்.
பரோலை நீட்டிக்க கோரிக்கை
இந்நிலையில் நாளையுடன் அவரது பரோல் காலம் முடிவடையவுள்ளது. இதைத் தொடர்ந்து அவரது தந்தைக்கு மேலும் இரு அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டியுள்ளதால் பேரறிவாளனுக்கு பரோலை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று தாயார் அற்புதம்மாள் கடந்த சில நாள்களுக்கு முன்னர் முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு?
இந்த கடிதத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகமும் ஆலோசனை செய்து வந்தனர். இந்நிலையில் பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
