பாலினத்தை விட நிபுணத்துவம் திறமையில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன்! - ஈரானிய திரைப்பட தயாரிப்பாளர் ரக்ஷன் பெனிடெமாட்

கோவாவில் நடைபெறும் 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு தலைவரும் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளருமான ரக்ஷன் பெனிடெமாட் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்களும் கலைஞர்களுமான சிரோ குவேரா, விமுக்தி ஜெயசுந்தரா, நிலா மதாப் பாண்டா உள்ளிட்ட நடுவர் குழு உறுப்பினர்களும் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடினர்.
திரைப்படங்களைத் தேர்வுசெய்த அனுபவம் பற்றி நடுவர் குழு தலைவரும் ஈரானிய திரைப்பட தயாரிப்பாளருமான ரக்ஷன் பெனிடெமா கூறும்போது, பல்வேறு நாடுகளிலிருந்து பல விதமான திரைப்படங்களைத் தேர்வு செய்ததைத் தாம் மிகவும் ரசித்ததாகவும் இது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம் என்றும் கூறினார். "திரைப்பட தயாரிப்பு, பார்வையிடுதல், தேர்வு செய்தல் ஆகியவற்றைப் பொறுத்தவரை பாலின அடிப்படையில் வேறுபாடு எதையும் நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பாலினத்தை விட நிபுணத்துவம் திறமையில் நான் அதிகம் கவனம் செலுத்துகிறேன். இதனைத் திரைப்பட தயாரிப்பில் ஈடுபடும் பெண்கள் செய்ய வேண்டும்." திரைப்பட தயாரிப்பு மற்றும் தேர்வு செய்த கண்ணோட்டத்தில் பாலின அம்சத்தின் முக்கியத்துவம் பற்றிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
இந்திய சினிமா உயிர்த்துடிப்போடும் பன்முகத் தன்மையோடும் இருப்பதாக கொலம்பியாவின் திரைப்பட இயக்குநரும் சர்வதேச போட்டிக்கான நடுவர் குழு உறுப்பினருமான சிரோ குவேரா கூறினார். இந்திய சினிமாவின் கற்பனை உண்மையில் வியப்பளிப்பதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். இது உண்மையிலேயே கௌரவமிக்க திருவிழா என்றும் இதில் நடுவர் குழுவில் பங்கு வகித்ததற்கு பெருமைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெருந்தொற்றின் தாக்கம் திரைப்படங்களில் இருந்தது பற்றிய கேள்விக்கு பதிலளித்த நடுவர் குழு உறுப்பினரான பிரபல இலங்கை திரைப்பட இயக்குனர் விமுக்தி ஜெயசுந்தரா கூறுகையில், கேமராவின் பின்னணியில் பெருந்தொற்றின் தாக்கம் இருந்திருக்க வேண்டும், அதில் நிறைய சவால்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் திரைப்படங்களில் இவை பிரதிபலிக்கவில்லை என்று கூறினார். இந்திய சர்வதேச திரைப்பட விழாவுக்கான திரைப்படங்கள் தெரிவில் பன்முகத்தன்மையும் சிறப்பம்சமும் கருத்தில் கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
"சில நேரங்களில் ஓர் இயக்குநர் கதையோடு பல ஆண்டுகள் பயணிப்பார், திரைப்படமாக உருவாக்குவதற்கும் நீண்ட காலம் பிடிக்கும். மேலும் இந்தத் திரைப்படங்கள் பெருந்தொற்று காலத்தை மட்டும் சார்ந்ததாக இருக்கவில்லை" என்று நடுவர் குழுவின் மற்றொரு உறுப்பினரான நிலா மதாப் பண்டா கூறினார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
