பவள விழாவில் ரஜினி கலந்து கொள்வார் ! திமுக அறிவிப்பு!

தி.மு.க. நாளேடான முரசொலி பத்திரிகை பவள விழா வருகிற 10-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த விழாவில் பிரபலமான திரை நட்சத்திரங்கள் மட்டுமில்லாமல் அரசியலின் போக்கை மாற்றுபவர்களாக கருதப்படும் கமல், ரஜினி இருவரும் அழைக்கப்பட்டுள்ளனர்.
கமல்ஹாசன் விழா மேடையில் பேசுகிறார். அழைப்பிதழில் உரையாற்றுவோர் பெயர் பட்டியலில் அவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. ஆனால் ரஜினி பெயர் இடம் பெறவில்லை.
எனவே ரஜினிக்கு அழைப்பு இல்லை. அவர் பங்கேற்க மாட்டார் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் ரஜினியும் பங்கேற்பதாக தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது.
தி.மு.க. நிர்வாகிகள் கூறும்போது, ரஜினி பேச விரும்பவில்லை என்றும், பார்வையாளராக வருவதாகவும் கூறி விட்டார். இதுபற்றி அவர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்து விட்டார். எனவேதான் அவரது பெயர் இடம் பெறவில்லை. ஆனால் அவரும் நிச்சயமாக கலந்து கொள்கிறார் என்றனர்.
பவள விழா சிறப்பு மலர் 512 பக்கங்களுடன் தயாராகிறது. இந்த மலருக்கு தேசிய அளவில் 13 தலைவர்களிடம் வாழ்த்து பெறப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து அனுப்பி உள்ளார்.
மேலும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, கம்யூனிஸ்டு தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்த்துக்களும் இடம் பெற்றுள்ளன.
முரசொலி தி.மு.க. தலைவர் கருணாநிதியால் 1942-ல் வார இதழாக தொடங்கப்பட்டு பின்னர் தின இதழாக வெளியானது. அன்று முதல் இன்று வரையான பல்வேறு தகவல்கள் இந்த இதழில் இடம் பெறுகிறது. இந்த மலரின் விலை ரூ.3 ஆயிரம் ஆகும்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
