தமிழகத்தில் இப்படியும் ஒரு கலெக்டரா!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்கு மேலும் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நிறுவனங்கள், கடைகள், மருத்துவமனைகள், வீடுகள், அரசு கட்டிடங்கள், தியேட்டர்கள் என அனைத்து இடங்களிலும் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் இதை சரிவர கடைபிடிக்காமல் கொசு புழுக்கள் உற்பத்திக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர்கள் தீவிர சோதனைகள் செய்து, கொசு உற்பத்தியாகும் இடங்களின் உரிமையாளர்களுக்கு அபராதங்கள் விதித்து வருகிறார்கள். சேலத்தில் தனியார் மருத்துவமனை கூட ரூ. 10 லட்சம் அபராதத்திற்கு உள்ளானது.
மருத்துவமனைக்கு சீல்:-
தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகிறார்கள். சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய சிகிச்சை அளிக்காத தனியார் மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மதுரை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் மாநகராட்சி பகுதிகளில் இன்று ஆய்வு பணி மேற்கொண்டார்.
வீட்டின் உரிமையாளர்:-
மதுரை தபால் தந்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் சுகாதாரமற்ற முறையில் குப்பைகள் குவித்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்து அந்த வீட்டின் உரிமையாளருக்கு ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தார். அதேபோல பூட்டி கிடந்த 4 வீடுகளில் முட் செடிகள், புதர்கள் வளர்ந்து கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக வீட்டின் உரிமையாளருக்கு நோட்டீசு அனுப்பவும் கமிஷனர் உத்தரவிட்டார்.
சேலம் கமிஷனரும் ஆய்வு:-
இதேபோல சேலம் மாநகராட்சி கமிஷனர் சதீஷ், கோரிமேடு பச்சியம்மன் தியேட்டரில் அதிரடி சோதனை நடத்தினார். அங்கு தண்ணீர் தேங்கி டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் தியேட்டர் வளாகம் இருந்ததால் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தார். மேலும் 3 தனியார் நிறுவனங்களுக்கும் கல்வி நிறுவனத்துக்கும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேலம் கலெக்டர் ரெய்டு:-
நேற்று நகரில் கலெக்டர் ரோகிணி அதிரடி சோதனைகளை நடத்தினார். கொசு வளரும் வாய்ப்புள்ள வகையில், சுற்றுப்புறத்தை வைத்திருந்த எல்.ஆர்.என் பஸ் நிறுவனத்திற்கு ரூ.15 லட்சம் அபராதம் விதித்தார் ரோகிணி. சேலத்தில் டெங்கு பாதித்தோர் எண்ணிக்கை அதிகம். இந்த நிலையில், கலெக்டர் அதிரடி சோதனைகளை நடத்தி கொசு உற்பத்தியாகும் இடங்களை பராமரிப்போருக்கு அபராதம் விதித்தார்.
பல மாவட்டங்களிலும்:-
இதேபோல திருவள்ளூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் ஆட்சியர்கள் சோதனைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்காமல், நீர் தேங்கவிடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு ஆயிரம் முதல் லட்சங்கள் வரை அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
