சேலத்தில் இன்று ஆளுநர் ஆய்வு- திமுக கூட்டணிகள் போராட்டம்!

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த மாதம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். இதை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
இந்த எதிர்ப்பை மீறி கடந்த வாரத்தில் கடலூர் மாவட்டத்தில் ஆய்வு நடத்தினார் தமிழக ஆளுநர். இதனை கண்டித்து ஆளுநருக்கு கறுப்புகொடி காட்டப்பட்டது. கடலூரில் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்ட ஆளுநர் பெண்கள் குளித்துக்கொண்டிருக்கும் பகுதியில் ஆய்வு நடத்தினார் என்று குற்றசாட்டும் வைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆளுநர் இன்று சேலம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு உள்ளார். இன்று காலை ரயிலில் சென்னையில் இருந்து சேலம் சென்ற ஆளுநர், அங்கு நடக்கும் நிகழ்ச்சிகள் கலந்து கொள்கிறார். பின்னர் புதிய பேருந்து நிலையம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆளுநரின் இந்த ஆய்வை எதிர்த்து தி.மு.க தலைமையில் சேலத்தில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் கலந்து கொண்டு உள்ளனர். இதில் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களின் தொடர் எதிர்ப்புகளை மீறி ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநருக்கு கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.
மேலும், தொடர்ந்து மாநில சுயாட்சிக்கு கேடு விளைவிக்கும் ஆளுநர் இனியும் இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது என்று கோஷமிடப்பட்டது. இதனையடுத்து ஆளுநருக்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
