சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்ற 'ஆதார்'…

சென்னையில் நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த தமிழ் திரைப்படத் தயாரிப்பிற்கான விருதினை நடிகர் கருணாஸ், நடிகர் அருண் பாண்டியன், நடிகை இனியா, நடிகை ரித்விகா, நடிகர் ‘பாகுபலி’ பிரபாகர் நடிப்பில் வெளியான 'ஆதார்' திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது.
வெண்ணிலா கிரியேஷன்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் திருமதி சசிகுமார் வழங்க, இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில், வெளியான திரைப்படம் 'ஆதார்'. எளிய மனிதர்களின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்திருந்த இந்தத் திரைப்படம், வெளியாகி விமர்சன ரீதியாக நல்லதொரு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சென்னையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற்ற இருபதாவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில், தமிழ் படங்களுக்கான போட்டி பிரிவில் 'ஆதார்' உள்ளிட்ட 12 திரைப்படங்கள் திரையிடத் தேர்வு பெற்றன. இதில் 'ஆதார்' திரைப்படத்தை நடுவர்களும், பார்வையாளர்களும் கண்டு ரசித்து பாராட்டினர்.
இதனைத் தொடர்ந்து சிறந்த தமிழ் படத் தயாரிப்பிற்கான விருதிற்கு, 'ஆதார்' படத்தினைத் தயாரித்த தயாரிப்பாளர் பி.சசிகுமார் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழ், சென்னை சர்வதேச திரைப்பட விழா விருது வழங்கும் நிகழ்வில் அவருக்கு வழங்கப்பட்டு, கௌரவிக்கப்பட்டார்.
இதன் மூலம் 'ஆதார்' திரைப்படம், சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு விருது பெறுவது தொடர்கதையாக நீடிக்கிறது. இதனால் படக்குழுவினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
