கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இடைநிலை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது.

கோவை மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள ஆலாங்கொம்பு அரசு பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமணம், குழந்தைகள் உதவி மையம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.
அப்போது, அப்பள்ளியில் 7, 8, 9 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகள் 9 பேர் தங்களிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் (54) என்பவர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்ததாக தெரிவித்து உள்ளனர். மேலும் இதுகுறித்து வகுப்பு ஆசிரியரான கீதா மற்றும் ஷியாமளா உள்ளிட்டோரிடம் அப்போதே தெரிவித்ததாகவும், அதனை அறிந்தும் பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, பட்டதாரி ஆசிரியை சண்முகவடிவு உள்ளிட்டோர் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும், தெரிவித்து உள்ளனர். இதனை அடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஹப்ஷா கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் விசாரணையில் அப்பள்ளியில் பயிலும் 7, 8, 9 ஆம் வகுப்பு மாணவிகள் 9 பேரிடம் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் நடராஜன் பாலியல் தொந்தரவு செய்ததும், இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை ஜமுனா, ஆசிரியைகள் சண்முகவடிவு, கீதா, ஷியாமளா உள்ளிட்டோர் இச்சம்பவத்தை போலீசாருக்கும், மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்காமல் இருந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து பள்ளி மாணவிகள் 9 பேரை பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் நடராஜன் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜமுனா, ஆசிரியைகள் கீதா, ஷியாமளா, சண்முகவடிவு உள்ளிட்டோருக்கு சம்மனும் அனுப்பப்பட்டது.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
