"கிடா விருந்தோடு" படப்பிடிப்பை நிறைவு செய்த "தொட்ரா" படக்குழு...

ஜெ எஸ் அபூர்வா புரடெக்ஷன்ஸ் சார்பில் ஜெய் சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’.
இயக்குநர் மதுராஜ் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்வி ராஜன், வீணா,
ஏ. வெங்கடேஷ், எம்.எஸ் குமார், கார்த்திக் சுப்புராஜின் தந்தை கஜராஜ், தீப்பெட்டி கணேசன், குழந்தை நட்சத்திரம் அபூர்வா சஹானா ஆகியோர் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் உத்தமராஜா இசையில் சிம்பு ஒரு பாடல் பாடியுள்ளார்.
படப்பிடிப்பு பழனி, பொள்ளாச்சி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய பகுதிகளில் நடைபெற்றது.
படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் படமாக்கப்படாமல் மீதமிருந்தது. அதற்கான ஐந்து நாட்கள் படப்பிடிப்பு பழனியில் நடைபெற்று வந்தது. பிருத்வி ராஜன், வீணா, எம் எஸ் குமார், மைனா சூசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பதினைந்தாம் தேதி நிறைவு பெற்ற படப்பிடிப்பில் கிட்டத்தட்ட நூற்றைம்பது பேர் வரை கலந்துகொண்டனர். அவர்கள் அனைவருக்கும் கிடா வெட்டி உணவு வழங்க ஏற்பாடு செய்தார் தயாரிப்பாளர் ஜெய்சந்திரா சரவணக்குமார்.
இரவு விருந்தாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கிடாவிருந்து களைகட்டியது. மகிழ்வான இவ்விருந்தோடு படப்பிடிப்பு நிறைவடைந்தது. அதோடு இருபத்தைந்து பேருக்கான உணவு, பொட்டலமாக்கப்பட்டு சாலையோரம் இருக்கும் முதியோருக்கும் ஆதரவற்றோருக்கும் படக்குழுவினர் வழங்கினர்.
ஏற்கனவே, நடைபெற்ற படப்பிடிப்பின் காட்சிகள் எடிட்டிங், டப்பிங், உட்பட அனைத்து வேலைகளும் முடிந்து தயாராக இருக்கிறது. இப்போது எடுத்த காட்சிகள் மட்டும் இணைக்கப்பட்டால் படம் வெளியீட்டிற்குத் தயாராகிவிடும்.
“படத்தை வெகு விரைவாக நிறைவு செய்துகொடுத்தார் இயக்குநர் மதுராஜ். அடுத்தடுத்து நல்ல படங்கள் இயக்கும் இயக்குநராக அவர் வருவார். அவருக்கும் , விரைந்து முடிக்க உதவிய படக்குழுவினருக்கும் எங்களது நன்றிகள்” என்றனர் ஜெய் சந்திரா சரவணக்குமாரும், அவரது கணவர் எம் எஸ் குமாரும்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
