கடன் வாங்கி கொடுத்ததால் வந்த வினை? - 6 வயது குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்!

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நாகசுரேஷ்(41). பேக்கரி உரிமையாளர். இவரது மனைவி விஜயலட்சுமி(42), மகள் முத்தீஸ்வரி(6).
இவர்கள் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் அணைக்காடு பகுதியில் வசித்துவந்தனர். இந்நிலையில், நேற்று அவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம்பக்கத்தினர் திருப்பூர் வடக்கு போலீஸாருக்குத் தகவல் அளித்தனர்.
அங்கு வந்த போலீஸார் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது 3 பேரும் விஷமருந்திய நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ''நாகசுரேஷ், தனது நண்பர் சூரியமூர்த்திக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார். ஆனால், இரு வாரங்களுக்கு முன் சூரியமூர்த்தி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டார். சூரியமூர்த்தி மனைவியிடம் நாகசுரேஷ் ரூ.10 லட்சம் குறித்து கேட்டபோது, 'நீங்கள் பணம் கொடுத்த விஷயம் எனக்குத் தெரியாது' என்று தெரிவித்துள்ளார். இதனால் நாகசுரேஷ் மற்றும் விஜயலட்சுமி கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இருதினங்களுக்கு முன்பு மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு, அவர்களும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் எழுதிய கடிதத்தில், 'நாங்கள் அணிந்துள்ள நகையை விற்று, எங்களது இறுதிச் சடங்கை செய்து விடுங்கள்' எனத் தெரிவித்துள்ளனர்' என்றனர்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
