Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

ஒரு குழந்தைக்கும் நாய்க்கும் உள்ள பாச போராட்டம் தான் இந்த பௌவ் பௌவ்...

On July 7, 2019
Bow Bow
Share

லண்டன் டாக்கீஸ் கே.நடராஜன் தயாரிப்பில், மாஸ்டர் அஹான், சிவா, தேஜஸ்வி ஆகியோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரதீப் கிளிக்கர் இயக்கியிருக்கும் திரைப்படம் "பௌவ் பௌவ்". லாஸ் ஏஞ்சல்ஸின் லைஃப் சர்வதேச திரைப்பட விழா உட்பட, பலவேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு, பல விருதுகளை வென்ற இந்த படம் உண்மைச்சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. மார்க் டி மியூஸ் & டெனிஸ் வல்லபன் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் அபிராமி ராமநாதன், எடிட்டர் மோகன் இசையை வெளியிட இயக்குனர் சசி பெற்றுக் கொண்டார்.

இந்த படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி என ஐந்து மொழிகளில் இந்த படத்துக்காக என்னை பாட வைத்திருக்கிறார்கள். பெங்காலியில் நான் பாடிய முதல் பாடல் இந்த படத்துக்காக தான் என்றார் பாடகர் மதுபாலகிருஷ்ணன்.

இந்த படத்தில் 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒரு பையனுக்கும், நாய்க்கும் இடையேயான அன்பை சொல்லும் படம், குழந்தைகளின் உலகத்தில் இருந்து பாடல்களை எழுதியிருக்கிறேன், குழந்தைகளுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும் என்றார் பாடலாசிரியர் முத்தமிழ்.

மாட்டுக்கார வேலன், ராமன் தேடிய சீதை போன்ற தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த படங்களை தயாரித்தது நடராஜன் அவர்களின் நிறுவனம். அவர் மிகவும் துணிச்சலான, ரசனையான தயாரிப்பாளர். இயக்குனர் பிரதீப் மிக ஆழமான சிந்தனை கொண்ட, கடின உழைப்பாளி, அவரின் நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தை தர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தயாரித்திருக்கிறார்கள் என்றார் சித்ரா லக்‌ஷ்மணன்.

நிறைய விருதுகளை வாங்கிய இந்த படத்தை நான் ஏற்கனவே பார்த்தேன். விலங்குகளை வைத்து கமெர்சியலாக மட்டுமே படங்களை எடுக்கும் சூழலில், அந்த மாதிரி இல்லாமல், மிக யதார்த்தமான படமாக இதை கொடுத்திருக்கிறார் இயக்குனர் பிரதீப் என்றார் தயாரிப்பாளர் முரளி.

இயக்குனர் என் நண்பர், அவருடன் பல கதை சொல்ல உடன் சென்றிருக்கிறேன். கடைசியில் சரியான ஒரு தயாரிப்பாளர் கிடைத்திருக்கிறார். பணம் இருப்பவர் மட்டுமே தயாரிப்பாளர் ஆகிவிட முடியாது, இயக்குனரின் சிந்தனையை புரிந்து கொள்பவர் தான் உண்மையான தயாரிப்பாளர். இந்த படத்தை பார்ப்பதை தாண்டி, உணர முடியும். நாம் மறந்த நிறைய விஷயங்களை நமக்கு இந்த படம் நினைவுபடுத்தும் என்றார் நடிகர் அசோக்.

இந்த படத்தை பார்த்தேன், மிகச்சிறப்பாக இருந்தது. பேரன்பு மாதிரி ஒரு படத்தை எடுத்து, அதை வியாபாரம் செய்ய ரொம்பவே சிரமப்பட்டேன். ஆனாலும் கேரளாவில் நீங்க பேரன்பு படத்தின் தயாரிப்பாளர் தானே எனக்கேட்டு பலரும் என்னுடன் செஃல்பி எடுத்துக் கொண்டனர். எவ்வளவோ கமெர்சியல் படங்களில் கிடைக்காத ஒரு பெயர் பேரன்பு படத்தின் மூலம் எனக்கு கிடைத்தது. அப்படி ஒரு பெயர் இந்த படத்துக்கும் கிடைக்கும் என்றார் தயாரிப்பாளர் பிஎல் தேனப்பன்.

என் நண்பன் இயக்குனர் பிரதீப்பை இயக்குனராக்கிய தயாரிப்பாளர் நடராஜன் சாருக்கு நன்றி. பூ படத்தை தான் முதல் படமாக இயக்க வேண்டும் என நினைத்தேன், ஆனால் என்னால் 'சொல்லாமலே' தான் எடுக்க முடிந்தது. ஆனால் பிரதீப் முதல் படமே தான் நினைத்த மாதிரி, வித்தியாசமான படத்தை கொடுத்திருக்கிறார் என்றார் இயக்குனர் சசி.

சினிமாவை ஒரு காலத்தில் ஆண்டு கொண்டிருந்த குடும்பம் கே நடராஜன் அவர்களுடையது. இவரின் முழுப்பெயர் ஜெயந்தி நடராஜன். எம்ஜிஆர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தார் இவரின் தந்தை. பௌவ் பௌவ் என்பதே அன்பை சொல்லக் கூடிய வார்த்தை. எனக்கு முக்கியமான நேரத்தில் நாங்கள் வளர்த்த நாயுடன் பல சிறந்த அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டிருக்கின்றன. நடராஜன் சார் ஒரு ரசனையான தயாரிப்பாளர். விலங்குகளை வைத்து படம் எடுக்கும் சிரமம் எனக்கு நன்றாகவே தெரியும். இந்த குழுவின் உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். சரிகம நிறுவனம் மாதிரி நல்ல நிறுவனங்கள் சினிமாவில் இருப்பது மகிழ்ச்சி என்றார் எடிட்டர் மோகன்.

ஜெயலலிதா, ரஜினிகாந்த் ஆகியோருக்கு முன்னரே போயஸ் கார்டனில் குடியேறிய சினிமாக்காரர் ஜெயந்தி ஃபிலிம்ஸ் நடராஜன் செட்டியார். மிகப்பெரிய தயாரிப்பாளர். தற்போது தேவர், ராமநாராயணன் ஆகியோரை தொடர்ந்து நடராஜன் விலங்குகளை வைத்து படம் எடுத்திருக்கிறார். இது தொடர வேண்டும். பத்திரிக்கையாளர்கள் நல்ல படங்களை எப்போதும் கைவிட மாட்டார்கள், இந்த படத்தையும் நிச்சயம் வெற்றிப் படம் ஆக்குவார்கள் என்றார் அபிராமி ராமநாதன்.

இந்த இசை வெளியீட்டு விழா எனக்கு மிக நிறைவாக இருக்கிறது. தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் எல்லோரும் வந்திருந்து எங்களை வாழ்த்தியிருப்பது மகிழ்ச்சி. பலரை போலவே நானும் இன்னும் பொருளாதார ரீதியிலும், மன ரீதியிலும் கஷ்டப்பட்டு கொண்டு தான் இருக்கிறேன். தாய், தந்தை எனக்கு கொடுத்த பயிற்சி, பொறுமை, விடாமுயற்சி என்ற மூன்று விஷயங்கள் தான் என்னை ஓட வைத்துக் கொண்டிருக்கிறது. இயக்குனர் சசி சார் என்னை நன்றாக புரிந்தவர், அதனால் அப்படியே என்னை தெலுங்கு இயக்குனர் கருணாகரன் சாரிடம் அனுப்பி வைத்தார். அங்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். நடிகர் ரகுவரன் சாரிடம் பழகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் என்னை சிறந்த படங்களை இயக்குவாய் என என் மீது நம்பிக்கை வைத்திருந்தார், அதை நான் நிறைவேற்றுவேன். தயாரிப்பாளர் நடராஜன் சார் இந்த கதையை கேட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, எந்த கேள்வியும் கேட்காமல் இந்த படத்தை எடுத்தார். இது குடும்பத்துடன் வந்து பார்க்கும் படமாக இருக்கும் என்றார் இயக்குனர் பிரதீப் கிளிக்கர்.

இந்த விழாவில் தயாரிப்பாளர் கே நடராஜன், ஸ்பெஷல் எஃபெக்ஸ் சேது, படத்தொகுப்பாளர் கோபால், பாடலாசிரியர் ராகுல் காந்தி, ஜெஃபி ஜார்ஜ், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், மாஸ்டர் அஹான், சரிகம ஆடியோ ஆனந்த், இசையமைப்பாளர் டெனிஸ் வல்லபன், ஜேசிடி பிரபாகர், டேவிஸ், பாடகர் சுஜித் சுதர்ஷன், நடிகர் சத்யன், நடிகை ஷர்மிளா, ராம்பாபு, புலிக்குட்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.