ஊழியர்கள் சாலை மறியல் சென்னையில் போக்குவரத்து முடங்கியது!

சென்னையில் போக்குவரத்து ஊழியர்கள் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலைமறியலில் ஈடுபட்டதால் அண்ணாசாலை, பல்லவன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஊதிய உயர்வு, ஓய்வூதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2-வது நாளாக போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை முதல் பல்லவன் இல்லத்தில் உள்ள அரசுப் பணிமனையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால் காலை முதல் சென்னையில்
குறைந்த அளவிலான பேருந்துகளே இயக்கப்பட்டதால் மக்கள் அவதிக்கு ஆளாகினர். இந்நிலையில் இன்று மாலையில் திடீரென போக்குவரத்து ஊழியர்கள் பல்லவன் இல்லம் அருகே சுமார் ஒரு மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தால் பல்லவன் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஊழியர்களின் போராட்டத்தால் அண்ணாசாலை, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு உள்ள ஈவெரா சாலை, பூந்தமல்லி சாலை உள்ளிட்டவற்றில் வாகனங்கள் நெருக்கியடித்து காத்துக்கிடக்கின்றன.
எப்போதும் போக்குவரத்து நெரிசலுடன் இருக்கும் பூந்தமல்லி,சென்ட்ரல் பகுதியில் அலுவலகம் விட்டு வீட்டிற்கு செல்வோர் மற்றும் அரசு மருத்துவமனை செல்வோர், புறநகர் ரயில் பிடிக்க செல்வோர் என்று மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் நேரம். இதனால் மக்கள் பேருந்துகளை விட்டு இறங்கி சாலையில் நடந்து செல்கின்றனர்.
சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் காத்திருக்கின்றன. சில வாகனங்கள் கடற்கரை சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதால் அந்தப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள சிக்னல்கள் இயக்கப்படாத நிலையில் தேங்கி நிற்கும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் திண்டாடி வருகின்றனர்.Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
