உதயநிதி துணை முதல்வர் ஆவது விசிகவுக்கு பிடிக்கவில்லையா?

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி தருவது குறித்து விடுதலை சிறுத்தைகளின் ஆதவ் அர்ஜுன், எதிர்மறையாக பேட்டியளித்த விசயம், உதயநிதியை மிகவும் கடுபாக்கிவிட்டது.
உதயநிதியின் ஆதரவு அமைச்சர்கள், நெருங்கிய மா.செ. க்கள் பலரும், இது மோசமான பேட்டி , முளையிலேயே கிள்ளி எறியுங்கள். இல்லையெனில் உங்களின் இமேஜை கேள்விக்குறியாக்குவார்கள். இது பேட்டி என்கிற வகையில் ஆதவ் அர்ஜுன் போன்றவர்களின் கருத்தை கண்டிக்காமல் கடந்து போனால், ஆளாளுக்கு விமர்சனம் செய்வார்கள்.
இது நல்லதிற்கில்லை என்று உதயநிதியிடம் வலியுறுத்தினர். இதனையடுத்து, முதல்வர் ஸ்டாலினிடம் இதுபற்றி பேசியிருக்கிறார் உதயநிதி. அதேசமயம், உதயநிதி மீது அன்பு கொண்ட அமைச்சர்களும், ஸ்டாலினிடம் இது பற்றி விவாதித்திருக்கிறார்கள். குறிப்பாக, திருமாவளவனுக்கு தெரியாமல் அந்த பையன் (ஆதவ்) அப்படி பேட்டிக்கொடுக்க வாய்ப்பில்லை. திமுக - விசிக இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு இரண்டு தரப்பில் உள்ளவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022ம் ஆண்டு நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. அப்போது இந்த வெற்றி குறித்து விசிகவிற்கு முதல்வர் ஸ்டாலின் முக்கியமான அறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.
அதில், மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது. இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது. அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது. போறிஞர் அண்ணா சொன்ன "கடமை கண்ணியம் கட்டுப்பாட்டில்" மூன்றாவதாகச் சொல்லப்பட்ட கட்டுப்பாடுதான் மிக மிக முக்கியமானது என்று தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி சொல்வார்கள். அந்தக் கட்டுப்பாட்டை சிலர் காற்றில் பறக்கவிட்டு தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகளில் உட்கார்ந்திருக்கிறார்கள்.
குற்ற உணர்ச்சி: ஏதோ சாதித்து விட்டதாக அவர்கள் நினைக்கலாம். ஆனால் கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம், நான் எனது மிகுந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும்.
விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விட்டு, கழகத்தின் நற்பெயருக்கே களங்கம் விளைவித்தவர்கள் அந்தப் பொறுப்பை விட்டு விலகிவிட்டு, என்னை வந்து சந்தியுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மாவட்ட கழகச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் இதற்குரிய நடவடிக்கையில் விரைந்து ஈடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன், என்று கூறி இருந்தார் .
பேச வேண்டும்: இப்படியெல்லாம் திமுக - விசிக இடையிலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு இருக்கின்றன. குற்ற உணர்ச்சியால் " நான் குறுகி நிற்கிறேன் " எங்க தொண்டர்கள் செய்த செயலுக்கு வருந்துகிறேன் என்று அறிக்கை விடும் அளவிற்கு ஸ்டாலின் விசிக கூட்டணியை மதித்து இருக்கிறார். அதோடு திருமாவும் நேரடியாக சென்று ஸ்டாலினை சந்தித்து பேசும் அளவிற்கு இறங்கி சென்றுள்ளார்.
இப்படிப்பட்ட நிலையில்தான் ஆதவ் அர்ஜுன் பேட்டி காரணமாக இரண்டு தரப்பிற்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டு உள்ளது. திமுக, விசிகவின் டாப் தலைவர்கள் உடனே இதில் நேரடியாக தலையிட்டு பேச வேண்டும், சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
