Ottran Cheithi
BREAKING NEWS
தமிழகத்தில் 50 ஏழை குடும்பங்களுக்கு இலவச வீடுகள் - 'ஜோய் ஹோம்ஸ்' திட்டத்தை பாராட்டிய நடிகர் பிரசாந்த்

இறுதி கட்ட பணிகளில் பயணிக்கும் அதர்வாவின் திரைப்படம்

On September 28, 2020
Atharva
Share

ராக்போர்ட் எண்டர்டைன்மெண்ட் நிறுவனர் திரு T. முருகானந்தம் முதல் முறையாக “குருதி ஆட்டம்” படம் மூலம் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கிறார். இவர் 148 படங்களுக்கு மேலாக விநியோகம் செய்துள்ளார். அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், "எட்டு தோட்டாக்கள்" புகழ் ஶ்ரீகணேஷ் இயக்கும் "குருதி ஆட்டம்" படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் வெகு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து இயக்குநர் ஶ்ரீகணேஷ் கூறியதாவது,

"தயாரிப்பாளர் T. முருகானந்தம் அவர்களுடனான எனது இந்த திரைப்பயணம், கற்பனைக்கும் அப்பாற்பட்டது. எங்கள் உறவு மிகவும் உணர்வுப்பூர்வமானது. எங்கள் உறவு ஒவ்வொரு முறையும் பலமானதாக நேர்மறை வழியில் உறுதிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. படத்தின் துவக்கதில் “குருதி ஆட்டம்” திரைக்கதை மீதும், என் மீதும் அவர் வைத்த அசைக்க முடியாத நம்பிக்கையை நான் என்றும் மறக்க மாட்டேன். அவரிடம் நான் திரைக்கதை சொல்ல, என் மீது மிகுந்த மதிப்பும், நம்பிக்கையும் கொண்டிருந்தார் அவர். "8 தோட்டாக்கள்" பார்த்த பிறகு எனக்கு இப்படத்தை இயக்கும் வாய்ப்பை தந்தார். ஆனால் ஒரு தயாரிப்பாளராக எந்த ஒரு சிறு விசயத்திலும் தலையிடாமல், படைப்பில் எனக்கு முழு சுதந்திரம் தந்தார். இது எனக்கு பெரும் பொறுப்புணர்வை தந்தது. நான் படத்தை மேலும் மேலும் வெகு கவனமுடன் உருவாக்க இதுவே காரணம். மேலும் இப்படத்தின் நாயகன் அதர்வா ஒரு மிகச்சிறந்த நடிகர். எனக்கு தொடர்ந்து உற்சாகம் தந்து, நம்பிக்கையூட்டிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு சகோதரர் போல தான் என்னிடம் நடந்துக்கொண்டார். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் மிகத்தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மிக விரைவில் படத்தின் இசை, டிரெய்லர், பட வெளியீடு குறித்த செய்திகள் அதிகாரப்பூர்வமாக வெளிவரும்" என்று கூறினார்.


குருதி ஆட்டம் படத்தை தொடர்ந்து மிக முக்கியமான, தரமான படங்களையும் அடுத்தடுத்து தயாரித்து வருகிறார் தயாரிப்பாளர் T. முருகானந்தம். குழந்தைகளை மையமாக கொண்டு காமெடி கலந்த கமர்ஷியல் படத்தை இரண்டாவதாக தயாரித்து வருகிறார். இயக்குநர் மிஷ்கின் அவர்கள் இயக்கத்தில், ஆண்ட்ரியா ஜெர்மீயா நடிப்பில் உருவாகும் “பிசாசு 2” படத்தின் அறிவிப்பே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் தமிழில் சில முக்கிய படைப்புகளின் உரிமையை பெற்று விநியோகம் செய்யவுள்ளது தயாரிப்பாளர் T. முருகானந்தம் அவர்களின் 'ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட்' நிறுவனம்.
மேலும் ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் அடுத்த மிகப்பெரும் வெளியீடாக ஜெயம் ரவி நடிப்பில் “பூமி” படம் வெளியாகவுள்ளது. தமிழ்நாட்டின் ஏழு பகுதிகளில் இப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்றுள்ளது ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். அடுத்ததாக "இருட்டறையில் முரட்டுகுத்து" படப்புகழ் சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் அதன் அடுத்த பாகமாக உருவாகும் “இரண்டாம் குத்து” படத்தின் உலகளாவிய வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது.

Comments (0)

No comments yet. Be the first to share your thoughts!

Leave a Reply

* Your email address will not be published. Required fields are marked with an asterisk.