இது என்ன பொது கூட்டமா..? - துரைமுருகன் கண்டனம்.

பேரவையில் பேசும்போது மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் எனவும், அதை பேரவைத் தலைவர் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அவை முன்னவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2024-2025ம் ஆண்டுக்கான பட்ஜெட்டும், வேளாண்மை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன. இதன் மீது நடைபெற்ற விவாதங்களுக்கும் அமைச்சர்கள் பதிலளித்தனர். இதில் சில சட்ட மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன.
அதன் பிறகு சட்டசபை கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற காரணத்தால் சட்டசபையை தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்ததையடுத்து கடந்த 20ம் தேதி சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அனைத்துக் கட்சி உறுப்பினர்களையும் கடிந்து கொண்டு அவை முன்னவர் துரைமுருகன் பேசினார். அவர் பேசியதாவது,
'இந்த மன்றத்தில் உள்ள கண்ணியமும், கட்டுப்பாடும் மாறி வருவதை பார்க்க வருத்தமாக இருக்கிறது. பொதுக்கூட்டத்தில் பேசுவது போல சட்டமன்றத்தில் பேசக் கூடாது. குறைந்த நேரம் மட்டுமே கொடுக்கப்படுகிறது. எனவே பேரவைத் தலைவரை மட்டுமே குறிப்பிட்டு பேச வேண்டும். நீங்கள் பேரவையில் பேசுகிறீர்களா? பொதுக்கூட்டத்தில் பேசுகிறீர்களா?
அரை நூற்றாண்டாக நான் இந்த அவையில் இருக்கிறேன். இங்கு பேசும் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுக்கூட்டத்தில் பேசுவது போல் பேசக் கூடாது. ஆளும் கட்சியினர், எதிர் கட்சியினர், அமைச்சர்கள் யாராக இருந்தாலும் தங்கள் கட்சித் தலைவர்கள் என்ன செய்தனர் என புகழ்வதில் தவறில்லை. ஆனால் பொதுக்கூட்டத்தில் வட்டச் செயலாளரை குறிப்பிட்டுப் பேசுவதைப் போல் இங்கு பேசக்கூடாது. அது நல்ல மரபு அல்ல. இங்குள்ள அனைவருக்கும் நான் கூறுவது பொருந்தும்.
பேரவையில் பேசும்போது மாண்புமிகு பேரவைத் தலைவர் என்று மட்டுமே அழைக்க வேண்டும். அதை பேரவைத் தலைவர் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்' இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
