"அக்னி சிறகுகள்" முழு படத்தையும் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன் - தயாரிப்பாளர் டி.சிவா..!

மிகச்சரியாக ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு, செயல்படுத்தும் ஒரு படக்குழு அமைவது ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் வரம். உண்மையில், அது தான் தயாரிப்பாளரை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது, படம் பாதி முடியும் முன்பே அதன் வெற்றியை உறுதி செய்கிறது. அம்மா கிரியேஷன்ஸ் தயாரிப்பாளர் டி சிவாவின் மனநிலையும் அது தான். அவரின் 'அக்னி சிறகுகள்' படக்குழுவும் முன்பே திட்டமிட்டபடி, முதல் கட்ட படப்பிடிப்பை மிக சிறப்பாக முடித்திருக்கிறார்கள்.
"தமிழ் சினிமாவின் பொற்காலம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. ஒரு சில திரைப்படங்கள் திட்டமிடப்பட்டு, குறித்த நேரத்தில் முடிவடைந்து வருவது ஒட்டுமொத்த செயலையும் மென்மையானதாக மாற்றுகிறது. ஒட்டுமொத்த குழுவினரும் அத்தகைய ஒழுக்கத்தோடு இருப்பது தயாரிப்பாளர்களுக்கு மகிழ்ச்சியளிப்பதோடு, படம் சிறப்பாக உருவாகிறது என்ற நம்பிக்கையை அளிக்கிறது. ஆரம்ப நிலை கதை விவாதங்கள், கதை சொல்லல் என இயக்குனர் நவீன் எல்லாவற்றையும் மிக தெளிவாக பதிவுகளில் வைத்திருக்கிறார்.
ஒத்திகைகள் அல்லது மேக்கப் டெஸ்ட் என எல்லாவற்றையும் அவர் வாக்களித்தபடி நிறைவேற்றிக் கொடுத்தார். இப்போது முதல் கட்ட படப்பிடிப்பு மிக வேகமாக முடிந்திருப்பது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லாவற்றிற்கும் மேலாக, விஜய் ஆண்டனி, அருண் விஜய், ஷாலினி பாண்டே மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் அபரிமிதமான முயற்சிகளும், உழைப்பும் தான் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க உதவியாக இருந்திருக்கிறது. இயக்குனர் நவீன் வாக்களித்தபடி, அக்னி சிறகுகள் மிக சிறப்பாக உருவாகும் என்ற நம்பிக்கை உள்ளது, முழு படத்தையும் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்" என்றார் தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா.
அக்னி சிறகுகள் படத்துக்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார். கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். அருண் விஜய், விஜய் ஆண்டனி, ஷாலினி பாண்டே ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், நாசர், ஜகபதி பாபு மற்றும் சில பிரபல நடிகர்களும் நடிக்கிறார்கள்.

Comments (0)
No comments yet. Be the first to share your thoughts!
Leave a Reply
* Your email address will not be published. Required fields are marked with an asterisk.
